கழுகுமலை: கழுகுமலை அருகே கரடிகுளம் சிஆர் காலனியை சேர்ந்தவர் விஜயன்(40). தொழிலாளியான இவர், நேற்று காலை வேலை தொடர்பாக கழுகுமலைக்கு வந்துவிட்டு, மீண்டும் பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சி.ஆர்.காலனி அருகே சென்றபோது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த விஜயனை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் உயிரிழந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் கழுகுமலை அருகே கரடிகுளம் மேலத்தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர்(51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.