திருமங்கலம், ஜூன் 23: கள்ளிக்குடி அருகே நடைபெற்ற டூவீலர் விபத்தில் சிக்கிய கூலித்தொழிலாளி, மருத்துவ சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார்.
திருமங்கலத்தினை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்(58). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாலிங்கம் கள்ளிக்குடி தாலுகா அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள புற்களை அறுக்கும் பணிகளை மேற்கொண்டார். அப்போது திருமங்கலத்திலிருந்து கள்ளிக்குடி நோக்கி சென்ற டூவீலர் மகாலிங்கம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மகாலிங்கம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவரது மகன் காளிதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.