மார்த்தாண்டம், மே 3: கேரள மாநிலம் பாறசாலை இடிச்சக்கப்பிலாமூடு பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது (31). இவருக்கு சனா சல்மா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று பீர் முகம்மது தனது மகளை பைக்கில் ஏற்றிக்கொண்டு குளச்சல் நோக்கி புறப்பட்டார். களியக்காவிளை பிபிஎம் ஜங்சன் பகுதியில் சாலையோரம் தனது பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென பீர் முகம்மது மற்றும் அவரது மகள் இருந்த பைக் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் சனா சல்மாவின் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பீர் முகம்மது தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக களியக்காவிளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.