சென்னை: காஞ்சிபுரம், திம்மசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். சார்பில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட3ம் ஆண்டு மாணவர் மதனகோபால், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, கல்வி நிறுவனம், மாநில, மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழக அஜாக்கிரதையால் மதனகோபால் இறந்துள்ளதால் அவரது மரணத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி அவரது தாய் சர்மிளா ,சகோதரி திவ்யபாரதி ஆகியோர் 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கல்லூரி தரப்பில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தனியார் கல்லூரி தரப்பில், எவரும் கடலில் இறங்கக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மதனகோபாலும், மற்றொரு மாணவரும் கடலில் குதித்தனர். அலையில் சிக்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தபோது, மதனகோபால் உயிரிழந்து விட்டார். இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்றிருந்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். 21 வயது மாணவர் உயிரிழந்திருக்க மாட்டார். எனவே, மாணவரின் குடும்பத்துக்கு கல்லூரி நிர்வாகம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். கல்விச் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும், மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் எடுக்கவேண்டும் என்றார்….