திருவள்ளூர்: கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மறறும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 3,094 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணைய தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75,000, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் என கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதற்கு வருகிற ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும்.
கணினி வழித் தேர்வு 29ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in, https://socialjustice.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.’’ என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.