விருதுநகர், ஜூன் 25: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருநங்கைகள் நலவாரிய அட்டை, ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை, சொந்த சுயதொழில் துவங்க மானிய கடன் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 165 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் 20 பேருக்கு திருநங்கை தேசிய அடையாள அட்டை, ஒருவருக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை, 24 பேருக்கு மின்னணு ரேசன்கார்டு, 26 பேருக்கு தமிழ்நாடு திருநங்கைகள் வலவாரிய அட்டை என 71 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் திலகம், திருநங்கைகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.