கரூர், ஏப். 26: கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சியின் மையப் பகுதியில ஜவஹர் பஜார் உள்ளது. நகரின் இதய பகுதிகளில் ஒன்றாக இந்த பஜாரும் உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த பஜாருக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் வந்து செல்லும் வகையில் அனைத்து வகையான வர்த்தக நிறுவனங்களும் இந்த பஜாரில் உள்ளன. இந்த பஜாரில் இருந்து மக்கள் பாதை, மார்க்கெட், மாரியம்மன் கோயில், லைட்ஹவுஸ கார்னர், உழவர் சந்தை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு கட்ரோடுகளும் பிரிகிறது.
இதன் காரணமாக இந்த பஜாரில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜவஹர் பஜாருக்கு அடிக்கடி கனரக வாகனங்கள் வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, இந்த பஜாருக்கு வரும் கனரக வாகனங்களை கண்காணித்து முறைப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிடடு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.