கரூர், ஜூன் 27: கரூர் அரசு கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் அரசு கல்லூரியில், புதுடெல்லி விஷ்வ யுவ கேந்திரா, கரூர் கிராமியம் மற்றும் அரசு கல்லூரி தாவரவியல்துறை இணைந்து நடத்திய உலக சுற்றுச்சூழல் தினம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் சரவணன் வரவேற்றார். கிராமிய நிறுவன இயக்குனர் நாராயணன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்து பேசினார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார். நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகி சொக்கலிங்கம், தமிழ்த்துறை தலைவர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முதல்வரின் பசுமை தோழர் கோபால் கலந்து கொண்டு, வகுப்பறையில் இருந்து காலநிலை வரை நிலையான கிரகத்திற்கான இளைஞர்களின் வலிமை என்ற தலைப்பில் பேசினார். கிராமிய மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார். கருத்தரங்கின் முடிவில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.