வருசநாடு, மே 29: கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (41), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (29). இவர் கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் அசோக்குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 20ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அசோக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகதீஸ்வரியை கழுத்தில் குத்தியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அசோக்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து ஜெகதீஸ்வரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கண்டமனூர் போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அசோக்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.