திருபுவனை, செப். 4: கணவன், மனைவி மற்றும் இருதரப்பு உறவினர்கள் ேகாஷ்டியாக மோதிக்கொண்டதில் உருட்டுக்கட்டையால் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இது குறித்த புகாரின்பேரில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மதகடிப்பட்டில் விழுப்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் ஜெயபூஷ்ணம் (எ) கனிமொழி (30). இவருக்கு மரக்காணம் செட்டிகுப்பத்தை சேர்ந்த மதன் என்பவருடன் கடந்த 2021 செப்டம்பர் 10ம் தேதி திருமணம் நடந்தது.
அதன்பிறகு, கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 18 மாதமாக ஜெயபூஷ்ணம் மதகடிப்பட்டில் உள்ள தனது தாய் லட்சுமியின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி மதனின் அண்ணன் குணசேகர், நண்பர் ஆனந்த், குணசேகரின் மாமா நாகராஜ், அண்ணி சந்திரோதயம் ஆகியோர் லட்சுமியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஜெயபுஷ்ணம் தம்பி கலாநிதி (எ) கனகசபை வீட்டில் இருந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். இதில் மதன், லட்சுமி, ஜெயபூஷ்ணம், குணசேகர், கனகசபை ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், இருதரப்பினரும் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குணசேகர், மதன், லட்சுமி, ஜெயபூஷ்ணம், கலாநிதி (எ) கனகசபை ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.