சென்னை, மே 30: காவல் கட்டுப்பாட்டு உதவி எண் மூலம் அளித்த தகவலின்படி தி.நகர் பகுதியில் மின் தூக்கியில் சிக்கிய முதியவர் உள்பட 4 பேரை போலீசார் மீட்டனர். தி.நகர் முத்துரங்கன் தெருவில் 3 மாடி கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 2வது மாடியில் பாஸ்கரன் (60) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பாஸ்கரன் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்து மின்தூக்கி வழியாக செல்லும் போது, திடீரென மின்தூக்கி பழுதாகி நின்றது.
இதனால் பாஸ்கரன் உள்பட 4 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். உடனே பாஸ்கரன் காவல் கட்டுப்பாட்டு உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார். அதன்படி கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் உடனே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மின் தூக்கியில் சிக்கிக்கொண்ட பாஸ்கரன் உள்பட 4 பேரை பத்திரமாக மீட்டனர்.