அருமனை, ஜூலை 7: கடையால் அருகே மதுபோதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் அருமனை அருகே கடையால் காவல் எல்லைக்குட்பட்ட நெட்டா அரங்கநாடு பகுதி உள்ளது. இங்கு சிற்றாறு அணை உள்ளதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 பைக்குகளில் 3 வாலிபர்கள், 3 இளம்பெண்கள் அரங்கநாடு பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இளம்பெண்கள், வாலிபர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளை பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனை பார்த்த சுற்றுலா பயணிகள், அவர்களிடம், ஏன் பொதுஇடத்தில் நின்று தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களின் ரகளை அதிகமானதால் சுற்றுலா பயணிகள் கடையால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்ததும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் பைக்கில் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை தப்ப விடாமல் தடுத்தனர். அதில் ஒரு பெண் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடி களியல் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பஸ்சில் ஏறி சென்றுவிட்டார்.ஒருவாலிபர் ஒரு பெண்ணுடன் பைக்கில் தப்பினார். எனினும் போலீசார் போதையில் இருந்த 2 வாலிபர்கள், ஒரு இளம்பெண்ணை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 3 பேரையும் கடையால் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் போதையில் வந்தது மேல்பாலை மாங்காளை பகுதியை சேர்ந்த சுஜித் (27), மிதின் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களுக்கும் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக அபராதம் விதித்தனர். மேலும் 3 பேரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அரங்கநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.