கடையம், ஜூன் 7: கடையம் அருகே பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்புரத்தை அடுத்த சின்னக்குமார்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(87). இவர் கடந்த 4ம்தேதி திடீரென விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஆறுமுகத்தின் மகள் அரியபுரத்தில் வசித்து வருகிறார். அவரது மகனுக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதற்கு ஆறுமுகத்தை அவரது பேரன் அழைக்கவில்லை கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆறுமுகம் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கடையம் அருகே பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தாத்தா தற்கொலை
0