கடவூர், மே 29: தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) நிறைவு பெற்றதை ஒட்டி, குடிகள் மாநாடு நிகழ்ச்சியில் 34 பயனாளிகளுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். கடவூர் வட்டாட்சியர் சௌந்திரவள்ளி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த 22ம் தேதி அன்று கடவூர் குறுவட்டம், 23.5.2025ம் தேதி மைலம்பட்டி குறுவட்டம், 27.5.2025ம்தேதி மைலம்ப்பட்டி குறுவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பகுதி, வாழ்வார்மங்களம், தென்னிலை, வெள்ளப்பட்டி, கீரனூர், கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய 8 ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் என அந்தந்த குறுவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது ஆய்வு நடைபெற்றது. நேற்றுமுன்தினம் நடந்த விவசாயிகளின் குடிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தகுதியடைய 34 பயனாளிகளுக்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது,இந்த வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பயன்பெறாத பொதுமக்களை ஆர்ஐக்கள், விஏஓக்கள், உதவியார்கள் ஆகியோர் அவரவர் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற வேண்டும். பின்னர் அவர்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்து அவர்களுக்கு நலதிட்டங்களை வழங்க மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் ஹேமலதா, வட்ட வழங்கல் அலுவலர் பெரியசாமி, நிலஅளவையர்கள் அரவிந்த், ஆர்ஐக்கள் அருள்ராஜ், அரவிந்த், விஏஓக்கள் முத்துச்சாமி, பழனியப்பன், பிரான்ஸிஸ், ராஜேஷ், தமிழரசி உள்பட வருவாய்த்துறை உதவியாளர்கள் பெண்கள், விவசாயிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.