தோகைமலை, செப்.14: கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் விடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆற்றுப் பாசனங்களில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடந்து வருகிறது. தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது.
இதேபோல் கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளும் கிணறு மற்றும் குளத்துப்பாசன விவசாய நிலமாக உள்ளது. ஆண்டுகள் தோறும் பருவமழை பெய்து வந்தால் மேற்படி பகுதிகளில் விவசாயம் செழித்து, விவசாயிகளும், விவசாய தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழையானது கனிசமாக பெய்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பருவமழை தொடங்கியபோதும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் மாயனூரில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக இன்னும் தண்ணீர் திறக்கவில்லை.
ஆழ்குழாய் கிணறுகள் உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாற்று உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கிணற்று பாசன விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடிக்காக வேளாண்மை துறை மூலம் விதை நெல் பெற்று சாகுபடிகளை செய்து வருகின்றனர். சம்பா சாகுபடியில் புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்தால் கொலநோய், யானைக்கொம்பான், இழைசுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என விவசாயிகள் கூறுகின்றனர். பருவம் தவரி 30 நாள் பயிர்களை (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்தால் மேற்கண்ட நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் வளர்ந்த பயிரில் கொப்பறை அதாவது (பூக்கிற தருவாய்) பனிகாலங்களில் ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நோய்தாக்கி மகசூல் குறையும் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பா நாற்று உற்பத்தி பணிகளில் நவீன இயந்திரம் மூலம் நடவு செய்வதற்காக ஒருசில பகுதிகளில் பாய் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.