நாகப்பட்டினம், ஏப். 28: மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநிலங்களில் மீனவர்கள் 61 நாட்கள் ஆழ் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இதன்படி கடந்த 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். தங்களது படகு மற்றும் வலைகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தடைக்காலம் விசை படகுகளுக்கு மட்டுமே பொருந்தும் கரைப்பாடு எனப்படும் கரைப்பகுதியில் சென்று மீன் பிடி தொழில் செய்யும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு பொருந்தாது.
இதனால் வழக்கம் போல கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் பைபர் படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், சாமந்தான்பேட்டை , செருதூர் உள்ளிட்ட 25 மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து நேற்று அதிகாலை கரை திரும்பினர். நாட்டுப் படகுகளின் மீன்களை பிடித்த சில மணி நேரங்களிலேயே விற்பனைக்கு வருவதால் சுவை மிக்க மீன்களை வாங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீன் பிரியர்கள் சிறிய வகை மீன்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். அமாவாசை என்பதால் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.