மதுரை, ஏப். 25: தன்னை கடத்திச்சென்றவர்கள், ஒருவேளை உணவு மட்டுமே கொடுத்ததாக மீட்கப்பட்ட தொழிலதிபர் தெரிவித்துள்ளார். மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சுந்தரம்(58). இவருக்கு சொந்தமாக திண்டுக்கல்லில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்க முயன்ற திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ்(70) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சுந்தரத்தை கடந்த 6ம் தேதி மதுரையிலிருந்து காரில் கடத்தினார். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றினர். நாசிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காரிலேயே அவரை வைத்துக்கொண்டு சுற்றியுள்ளனர்.
போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து, காரிலேயே மதுரைக்கு திரும்பி வந்தனர். அப்போது ரிங்ரோடு போலீசாரிடம் சிக்கினர். தொழிலதிபர் சுந்தரத்தை மீட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். இதனிடையே மீட்கப்பட்ட தொழிலதிபர் சுந்தரம் கூறும்போது, ‘‘மதுரையிலிருந்து என்னை கடத்திச்சென்ற கும்பல், பல மாநிலங்களுக்கு கொண்டு சென்றனர். ஒரே இடத்தில் இல்லாமல் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு காரிலேயே சுற்றினர். ஒரே ஒரு ஆடை மட்டுமே வாங்கி கொடுத்தனர். தினந்தோறும் ஒருவேளை மட்டுமே உணவு வாங்கி கொடுத்து கொடுமைப்படுத்தினர்’’ என்றார்.