சேலம், ஜூன் 27: சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், சாலையோரம் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதனுள் சிறிய பொட்டலங்களில் அரை கிலோ கஞ்சா இருந்தது. உடனே அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், பெரியபுதூர் பகுதியை சேர்ந்த முத்து மகன் அஜித் (25) எனத்தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.