குடியாத்தம், செப்.21: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி, குடியாத்தம் அருகே வீட்டில் பதுக்கி பொட்டலங்களாக கட்டி விற்றவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லைமேடு கிராமத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி அதை பொட்டலங்களாக செய்து குடியாத்தம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கொல்லைமேடு கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் ராஜீவ்காந்தி(43) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். இதில், சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜீவ்காந்தியை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.