கோவை, ஜூலை 2: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியுள்ளது. இந்நிலையியல், உயர்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நேற்று நடந்த பயிற்சியில் கல்லூரியின் முதல்வர் எழிலி வரவேற்றார்.
அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பவன்குமார் பங்கேற்று மாணவர்களிடம் பேசியதாவது: புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள்தான் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காலம். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்லூரியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் நம்மால் படிக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.
எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் பாதியில் படிப்பை நிறுத்தக்கூடாது. பிரச்னைகளை பாசிட்டிவாக எதிர்க்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல சவால்கள் வரும். அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவுடன் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான முயற்சிகளில் ஈடுபடலாம். இவ்வாறு அவர் பேசினார்.