சென்னை, ஆக. 17: ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பயணியை போலீசார் கைது செய்தனர். ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு 164 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த செங்கல்பட்டு அடுத்த, கல்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் (34) என்ற பயணி அதிகளவு மதுவை வாங்கி குடித்துள்ளார்.
குடிபோதையில், சக பயணிகளிடம் சுரேந்தர் ரகளையிலும் ஈடுபட்டார். விமானப் பணிப்பெண்கள் அவரை கண்டித்தும் கேட்கவில்லை. மேலும் சுரேந்தர், தன் அருகில் இருந்த சக பயணியை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் வானில் விமானம் பறந்தபோது நடந்துள்ளது. இதுகுறித்து தலைமை விமானியிடம் பணிப்பெண்கள் புகாரளித்தனர். இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தலைமை விமானி புகார் அளித்தார். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஓமனில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இதை தொடர்ந்து, விமானத்துக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று, அங்கு மதுபோதையில் இருந்த சுரேந்தரை கீழே இறக்கினர். அதோடு, அவருக்கு குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை விரைந்து முடித்து, அவரை விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டருக்கு அழைத்து வந்தனர். அப்போதும் குடிபோதையில் இருந்த சுரேந்தர், ‘‘என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. நான் யார் என்பதை காட்டுகிறேன்’’ என்று வீராவேசமாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும், சுரேந்தர் மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடுவானில் விமானம் பறந்தபோது சக பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்களிடம் மதுபோதையில் ரகளை செய்த சுரேந்தரை கைது செய்து விசாரிக்கின்றனர்.