ஓசூர், மே 27: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்தூர் ஏரியில் நேற்று காலை பெண் சடலம் மிதந்தது. அதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ஓசூர் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். ஏரியில் சடலமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கும். அந்த பெண் புடவை அணிந்திருந்தார். இரு கைகளிலும் பூ பச்சை குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர், குடும்பத் தகராறில் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து, உடலை ஏரியில் வீசிச் சென்றனரா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.