அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில், ஒன்றிய அரசின் மக்கள் விரோதப்போக்கு மற்றும் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூர்கெரி என்ற இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலைக்கு காரணமாக இருந்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மணிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கறுப்பு கொடிகளுடன் கலந்து கொண்டனர்.