ஏரல், ஏப்.18: ஏரல் அருகேயுள்ள கீழமங்கலகுறிச்சி மறவர் தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (53). வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியான இவருக்கு ஆறுமுகசெல்வி (45) என்ற மனைவியும், முத்துமாரி (15) என்ற மகளும் உள்ளனர். தினகரன் தினசரி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வடகால் வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது வடகால் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள மங்கலகுறிச்சி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றவர் வீடு திரும்பாததால் இரவு உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது கரை பகுதி அருகே இவரது செருப்பு மற்றும் உடைகள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கி தேடி இரவு அவரது உடலை கண்டுபிடித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஆறுமுகசெல்வி ஏரல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, எஸ்.ஐ தாமஸ்டேனியல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தினகரன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் தினகரனுக்கு அவ்வப்பொழுது மயக்கம் வந்தவராக இருந்துள்ளார். இதேபோல் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது திடீர் என மயக்கம் வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.