வேலூர், ஜூன் 5: வேலூர் மாங்காய் மண்டியில் எத்திலீன் பயன்படுத்தி பழுக்க வைத்த 1டன் மாம்பழம் அழித்து உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்கள் உள்ளதா? என்று கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்ய மாவட்ட உணவுபாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாவட்டம் உணவுபாதுகாப்பு நியமனஅலுவலர் கைஷே்குமார் தலைமையில்(பொறுப்பு) உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ், மாநகர நலஅலுவலர் பிரதாப், சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மாங்காய் மண்டியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது எத்திலீன் எனப்படும் ரசாயனத்தை நேரடியாக மாம்பழங்களில் வைத்து பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த கடைகளில் சோதனை செய்ததில், 3 கடைகளில் இதுபோன்று விதிமுறைகளை மீறி, எத்திலீன் ராசயனம் நேரடியாக பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைத்தது தெரியவந்தது. இதனை உண்பதால் தீராத வயிற்று போக்கு, உடல்உபாதை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகநேரிடுகிறது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த சுமார் 1டன் மாம்பழங்கள் மாநகராட்சி மூலம் பெனாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் விதிமுறைகள் மீறி பழங்கள் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுபாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.