உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, ராவத்தநல்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடமானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடத்தில் ஊராட்சிக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டிடம் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரது பயன்பாட்டிலும் உள்ளது.
இந்நிலையில், இந்தக் கட்டிடம் அண்மை காலங்களாக வலுவிழந்து கட்டிடத்தின் மேலே உள்ள தளம் மற்றும் சுவற்றில் இருந்து பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. இதனால், கட்டிடத்தினுள் வைக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஆவணங்கள் பாதுகாப்பதில் சிக்கல் நிலவியுள்ளது. மேலும், அலுவலகத்திற்கு வரும் அரசு ஊழியர்கள், கிராம பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனே வந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, கட்டிடத்தினை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.