நாமக்கல், ஏப்.21: நாமக்கல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில், மத்திய-மாநில அரசு நிதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் ஒன்றியம், வகுரம்பட்டி ஊராட்சியில் ₹24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை, கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ₹4.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ₹3.18 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி 2வது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ₹19.53 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது, பணிகள் தரமாக உள்ளதா என சோதனை செய்து பார்த்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ₹5.72 லட்சத்தில் வகுரம்பட்டி சமத்துவ மயானத்தில் மயான மேடை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், சிங்கிலிப்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ₹3.65 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்படும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்களிடம் களம் அமைக்கப்பட்டுள்ளதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், ₹5.72 லட்சத்தில் சிங்கிலிப்பட்டியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுவதையும், ₹12.61 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நேதாஜி நகரில் 15வது நிதி திட்டத்தின் கீழ், ₹4.32 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ₹4.92 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டப்பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமரன், பாஸ்கர், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.