Saturday, June 3, 2023
Home » ஊட்டி நஞ்சநாடு, தும்மனட்டி தோட்டக்கலை பண்ணைகளில் 5 லட்சம் முட்டைகோஸ் நாற்று 3 டன் விதை கிழங்கு தயார்

ஊட்டி நஞ்சநாடு, தும்மனட்டி தோட்டக்கலை பண்ணைகளில் 5 லட்சம் முட்டைகோஸ் நாற்று 3 டன் விதை கிழங்கு தயார்

by kannappan

ஊட்டி :  ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, தும்மனட்டி தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சம் முட்டைகோஸ் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளது. நஞ்சநாடு பண்ணையில் 3 டன் விதை கிழங்கும் தயார் நிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர்சாகுபடியிலும், சீதோஷ்ண நிலையிலும் அண்டை மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. முறையே காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் மற்றும் சில கிரமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி மற்றும் இதர வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.மலையின் இடைப்பட்ட பகுதிகளில் ஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. கூடலூர், பந்தலூர் போன்ற குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் நடக்கிறது.  இதற்கு அடுத்த படியாக மலை காய்கறி பயிர்கள் 7 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் பயிாிப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள பண்ணைகளில் இருந்து சில்வர் ஓக் நாற்றுகள், தேயிலை நாற்றுகள், விதை கிழங்கு, முட்டைகோஸ் நாற்றுகள், சைனீஸ் காய்கறி நாற்றுகள், இயற்கை உரங்கள், மண்புழு உரங்கள் போன்றவைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 70 டன் விதை கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டதாகவும், நடப்பு ஆண்டில் தற்போது நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணையில் 3 டன் விதை கிழங்கு இருப்பில் உள்ளது. கிலோ ஒன்றுக்கு ரூ.40-க்கு விவசாயிகள் பெற்று கொள்ளலாம். இதேபோல் முத்தோரை பாலாடாவில் உள்ள மத்திய உருளைகிழங்கு ஆராய்ச்சி நிலையத்திலும், விதை கிழங்கு இருப்பு உள்ளது. இங்கு முதலில் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என ஆராய்ச்சி நிலைய தலைவர் தெரிவித்துள்ளார். நஞ்சநாடு மற்றும் தும்மனட்டி பண்ணைகளில் 5 லட்சம் முட்டைகோஸ் நாற்றுகள் இருப்பில் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பெற்று கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) பாலசங்கர் கூறியதாவது: நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது 3 டன் விதை கிழங்கு இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கிலோ ரூ.40க்கு பெற்று கொள்ளலாம். மேலும் நஞ்சநாடு, தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் மொத்தம் 5 லட்சம் முட்டைகோஸ் நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மானியத்தில் ஒரு ஹெக்டருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் விலையின்றி வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். …

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi