ஊட்டி, ஏப். 18: ஊட்டி அருகே கல்லக்கொரை கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்த நிலையில், இவைகள் மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவது வாடிக்கையாக வைத்துள்ளன. சில சமயம் பொதுமக்களையும் தாக்குகிறது. தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ஊட்டி அருகே கல்லக்கொரை கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று வீட்டின் மாடியில் கட்டி வைக்கப்பட்டு இருந்து வளர்ப்பு நாயை கவ்வி பிடித்து சென்றது.
இது அப்பகுதி மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது. அதன் பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் தங்களது வீட்டை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து கண்காணிப்பு கேமராவும் பொருத்தியுள்ளார். அந்த கண்காணிப்பு கேமராவில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சிறுத்தை அந்த வீட்டில் உள்ள கம்பி வேலியின் அருகில் நின்று ஏதேனும் வளர்ப்பு பிராணிகள் இருக்கின்றதா என்பதை நோட்டமிடும் காட்சி அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாள் தோறும் பணிகளுக்கு செல்பவர்கள் இச்சாலை வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் இந்த கிராமத்தை தாண்டி தான் கரிகல்வலை கிராமத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது. பேருந்து வசதி இல்லாத கிராமமாக உள்ளதால் பொதுமக்கள் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நடத்துச் செல்லும் பொது மக்களுக்கு நாள்தோறும் சிறுத்தைகள் உலாவும் இந்த சிசிடிவி., காட்சிகளை கண்டு பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து ஒரே பகுதியில் மூன்று நாட்களுக்கு மேலாக உலாவி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.