உளுந்தூர்பேட்டை, டிச. 28: உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் தண்ணீர் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் செல்வக்குமார் (12). ராஜ்குமார் மகன் துரைப்பாண்டி (14). இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் இருவரையும் தேடி சென்றனர். அப்போது இதே கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இருவரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த செல்வக்குமார் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், துரைப்பாண்டி அரசு மாதிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 2 சடலத்தை போலீசார் அனுப்பியபோது பெற்றோர், உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.