உளுந்தூர்பேட்டை, நவ. 9: உளுந்தூர்பேட்டையில் நடந்த சிறப்பு தூய்மை முகாமில் மூத்த பெண் தூய்மையாளர் கால்களை கழுவி நீதிபதிகள் பொட்டு வைத்த பாத பூஜை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சிறப்பு தூய்மை பணித்திட்ட முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் திலீப் வரவேற்றார். நகராட்சி ஆணையர் இளவரசன், வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி விக்னேஷ் பிரபு ஆகியோர் துப்புரவு முகாகை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி விக்னேஷ் பிரபு ஆகியோர் மூத்த பெண் தூய்மை பணியாளர் உமாவதி என்பவரை அமர வைத்து அவருடைய கால்களை கழுவி பொட்டு வைத்து பாத பூஜை செய்து தூய்மைக்கு முழு காரணமாக உள்ள உங்களைப் போன்ற தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர். நீதிமன்ற வளாகம் முழுவதும் உள்ள முள் செடி, புதர்கள் அகற்றும் பணி நடந்தது. முன்னதாக தூய்மை பணியின் அவசியம் குறித்த உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முகாமில் அரசு வழக்கறிஞர்கள் இளமுருகன், வெங்கடேசன், ஜான்சிராணி மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.