மேட்டுப்பாளையம், ஜூன் 25: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் உலக யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் டாக்டர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் டாக்டர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று யோகா செய்தனர்.
நிகழ்ச்சியில் ஆசனா, பிராணயாமம், பிரத்தியாகாரம், தரானா, சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், சலபாசனம், மச்சியாசனம், சர்வாகாசனம், தனுராசனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து மாணவர்கள் அசத்தினர். பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு யோகா பயிற்சியாளர் வெள்ளியங்கிரி பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பராமரிப்பு துறை பொறுப்பாளர் சரவணகுமார் செய்திருந்தார்.