ஈரோடு, ஏப். 17: ஈரோட்டில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் மாதம் 2ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், இந்திய மருத்துவ சங்கம், ஸ்ரீ சமர்த்தனம் டிரஸ்ட் இணைந்து நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தகுமாரி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சசிரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியானது, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில், குழந்தைகள் நல மருத்துவர் சிவராமன், ஐஎம்ஏ நந்தகுமார், அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் சகிலா, ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள், அவர்களது பெற்றோர், செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.