கமுதி, ஜூலை 29: கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு 1000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கமுதி பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்ப படிவங்கள் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதி மற்றும் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் என இரண்டு இடங்களில் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது உரிமைத் தொகையை பெறுவதற்கான மனுக்களை தகுந்த ஆவணங்களுடன் அளித்து வருகின்றனர்.
வருவாய் ஆய்வாளரும், மண்டல அலுவலருமான மணி வல்லபன் முன்னிலையில், தன்னார்வலர்களும், பொறுப்பு அலுவலர்களும் இந்த மனுக்களை பெற்று வருகின்றனர். தற்போது வரை 1000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முதற்கட்ட முகாம் வரும் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் கிராமப் பகுதியில் உள்ள பெண்களுக்காக பசும்பொன், செங்கப்படை, பாக்குவெட்டி, மரக்குளம் உட்பட ஏராளமான கிராம பகுதிகளில் 51 மையங்களில், மகளிர் உரிமைத் தொகைகாண மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.