அரியலூர், ஜூன் 13: உணவுப்பொருள் வழங்கல்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் நாளை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாமினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், முகாம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இம்முகாமில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,
செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷ்ன் கார்டு, நகல், மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்ய புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்