ஈரோடு,ஆக.29: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 283 மனுக்கள் பெறப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு இலவச தையல் இயந்திரத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ராஜகோபால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.