ஈரோடு: ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி மற்றும் விற்பனையானது ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பர்கூழ் மண், வெள்ளெருக்கு வேர், மார்பில் பவுடர், மாவுக்கல், கருங்கல் போன்றவைகளினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வெண் மரம், நூக்கமரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர் மற்றும் தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகர் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல இந்த வருடம் புதிய வரவாக விதை விநாயகர், மயில் விநாயகர், நந்தி விநாயகர், ஆதியந்த பிரபு நடன விநாயகர், மியூசிக் விநாயகர் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் வருகின்ற 18ம் தேதி வரை கண்காட்சி இருக்கும் என்றும் விற்பனை நிலைய மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.