கரூர், மே 19: கரூர் மாவட்டம் ஈசநத்தம் செல்லும் சாலையில் சாலையோரம் கூடுதலாக தெரு விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து ஈசநத்தம், பாகநத்தம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கான சாலை உள்ளது. கரூரில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகிறது. இந்த சாலையில் கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து பத்தாம்பட்டி பிரிவு வரை சாலை கும்மிருட்டாக உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதே போல், பிரிவுச் சாலையில் நின்று, அந்த வழியாக வரும் பேரூந்துகளில் ஏறிச் செல்லும் போதிய மின் வெளிச்சம் குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை கூடுதலாக மின் விளக்கு வசதி அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மக்கள் நலன் கருதி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.