கிருஷ்ணகிரி, ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அலேகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரோஜா (29). இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட தகராறின்போது, ரோஜா கோபித்துக்கொண்டு நேரலகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி தாய் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரோஜா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி ரோஜாவின் தந்தை மாது, வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில், அதேபகுதியை சேர்ந்த மாது என்ற வாலிபர், ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்திச்சென்றிருக்க வேண்டும் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.