நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், நாமக்கல் வட்டார வள மையத்தில், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசி ராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரியதர்ஷினி பிரேமலதா மற்றும் கோமதி செயல்பட்டனர். இதில், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னறி தேர்வு நடத்தி, மாணவர்கள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்துதல், கற்றல் விளைவுகள், தனி, இணை, குழு செயல்பாடுகளை ஊக்குவித்தல், கற்றல் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது, அடைவுத் திறன் அட்டவணை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.