அரியலூர், ஏப்.18: அரியலூர் அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இலுப்பையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 8 ம் வகுப்பு மாணவர் மாரிமுத்து, தேசிய அளவில் தமிழ் இலக்கிய மன்ற போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி அனு மற்றும் பணி நிறைவு பெற்ற இடைநிலை ஆசிரியர் மதியழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர் மாரிமுத்து மற்றும் மாணவி அனு ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்து கவுரவித்தார். மேலும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் மதியழகனுக்கு பொன்னாடை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ, ஆல்பர்ட், அருள்ராஜ், கஸ்தூரி, அனிதா ஆகியோர் செய்திருந்தனர்.