திருவள்ளூர், ஜூலை 4: காக்களூர் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அங்குள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. நீர் மாசடைவதை தடுக்க, ஏரியினை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இது 194 ஏக்கரில் 2,682 மீட்டர் நீளம் வரையிலான நான்கு மதகுகள், இரண்டு கலங்கள்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்.
இதனால், கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியை ஒட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவானது. இதனால் அதிகளவில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் உருவானது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளிலிருந்து இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால், ஏரிக்குள் கலந்து விடுகின்றனர். இதனால், நீர் மாசடைந்து குடிக்க லாயக்கற்றதாக மாறியது.
மேலும், கடந்த ஆண்டு பெய்த மழையால் இந்த ஏரி நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், அந்த ஏரியில் உள்ள மீன்கள் செத்து கரையோரம் மிதக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு கிமீ தூரத்திற்கு கரையோர பகுதிகளில் இந்த மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரிக்குள் கலக்காத வகையிலும், இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.