வடமதுரை, ஏப். 28: வடமதுரை அருகேயுள்ள குருந்தம்பட்டியை சேர்ந்தவர் குமரசண்முகவேல் (75). இவருக்கும் இவரது உறவினரான பாலமுருகன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குமரசண்முகவேலுக்கும், பாலமுருகன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் குமரசண்முகவேல் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த பாலமுருகனின் தாய் ஜோதிமணி (62) ஆகியோர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வடமதுரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் எஸ்ஐ பாண்டியன் இருதரப்பை சேர்ந்த கதிர்வேல், பாலகங்காதரன், பாலமுருகன், குமரசண்முகவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.