கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(57), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா(43), போலீஸ்காரர். உறவினர்களான இவர்களின் நிலம் அருகருகில் உள்ளது. இவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 16ம் தேதி, ஏற்பட்ட பிரச்னையில் 2 aதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் கோவிந்தராஜ், முருகன்(44), மாரியப்பன்(44), பிரவீன்குமார்(23) ஆகிய 4பேர் காயம் அடைந்தனர். இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் ராஜா, தேவராஜ், சின்னராஜ் உள்பட 4பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே போல, ராஜா கொடுத்த புகாரில் தானும், தேவராஜ், சின்னராஜ் ஆகியோரும் காயமடைந்ததாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் கோவிந்தராஜ்(57), முருகன்(44), பிரவீன்குமார்(23), மாரியப்பன்(44) உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.