Thursday, May 15, 2025
Home மாவட்டம்தஞ்சாவூர் இயற்கை முறையில் அதிக மகசூல் பெற நெற்பயிர்களில் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் சிலந்திகளை காப்போம்

இயற்கை முறையில் அதிக மகசூல் பெற நெற்பயிர்களில் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் சிலந்திகளை காப்போம்

by MuthuKumar

வல்லம், ஏப்.28: பயிருக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே தின்னும் சிலந்தி வகைகள் ஒரு இரை விழுங்கி ஆகும். நெற்பயிரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சிலந்தி உண்ணிகளை பாதுகாத்து பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மாறி வரும் பருவகால சூழல்களுடன் போராடி விவசாயம் செய்து அதில் லாபம் பார்ப்பது என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவால். அதே சமயம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் விவசாயிகள் போராட வேண்டியுள்ளது. பல நோய்களை கட்டுப்படுத்த ரசாயன உரங்களை பயன்படுத்துவது தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் பூச்சி தாக்குதலை ரசயானம் இல்லாமல் இயற்கையாகவே கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அந்த வகையில் நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் சிலந்தியை பற்றிய விழிப்புணர்வை வேளாண்துறை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

உலக அளவில் சுமார் ஒரு லட்சம் சிலந்தி வகைகள் காணப்படுவதாகவும், இந்திய அளவில் சுமார் 1,300 வகை சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து வகை சிலந்திகளும் பூச்சிகளை மட்டுமே பிரதான உணவாக உட்கொள்கிறது. வலைக்கட்டும் சிலந்திகள் வலையில் வந்து மாட்டிக்கொள்ளும் பூச்சிகளையும் மற்றவை இரையைத் தேடிச் சென்று பிடித்து உண்ணும் பண்புகளை உடையது. பூச்சி மருந்து அடிக்காத நெல் வயல்களில் மார்கழி, தை மாதங்களில் காலை நேரத்தில் கவனித்தால் வயல் முழுவதும் வலைகள் காண்பது அழகாக இருக்கும். இவைகளை ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி அழிக்காமல் இருந்தாலே தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அப்படிப்பட்ட நன்மை செய்யும் சில சிலந்தி வகைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஓநாய் சிலந்தி:

இந்த வகை சிலந்திகள் நெற்பயிரில் அதிகமாக காணப்படும். இவற்றின் முதுகுப்பகுதியில் மூன்று கோடுகள் காணப்படும். இது சூலம் போன்ற வடிவத்துடன் வயிற்றுப் பகுதியில் வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் இரண்டு வரிசையில் அமைந்திருக்கும். பகல் நேரங்களில் தூரின் அடிப்பகுதியில் காணப்படும் இவைகள் வலை கட்டாது நேரடியாக தீமை செய்யும் பூச்சிகளை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. மிகவும் கூர்மையான பார்வை திறன் கொண்டதால் இரவில் இரைகளை பிடித்து உண்ணும். இரையை பிடிக்க தரையிலும், தண்ணீரின் மேற்பரப்பிலும் வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றது. வெண்மை நிற முட்டை கூடு பெண் ஓநாய் சிலந்தியின் வயிற்றுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த முட்டை கூட்டில் 200முதல் 300 முட்டைகள் வரை இடம் பெற்றிருக்கும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்தவுடன் தாயின் முதுகு பகுதியில் பெரும் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும். இவை குருத்துப்பூச்சி, தத்துப்பூச்சி, இலை சுருட்டு புழு, வெட்டுக்கிளி, கொம்புப் புழு, குருத்து ஈ உள்ளிட்ட அனைத்து பூச்சிகளையும் உட்கொள்ளும்.

பைச்சிலந்தி:
இவை நெற்பயிரின் தூர்கட்டும் பருவம் வரை அதிகமாக காணப்படும். தலையின் முன்பகுதி மழுங்கிய சதுர வடிவம் உடையது. பழுப்பு நிற வயிற்று பகுதியானது முட்டை வடிவம் உடையது. இதில் வெள்ளி நிறமுடைய மெல்லிய ரோமங்கள் காணப்படும். இந்த சிலந்தி இலையின் நுனிக்கு சற்று கீழே இலையினை முதலில் கீழ்நோக்கி மடக்கியும், பின்பு மேல்நோக்கி மடக்கியும் மூன்று பகுதிகளுடைய தடுப்பாக உண்டாக்கி முட்டையிட்டு வாழும். வலை பின்னாது. இரவில் வேகமாக சென்று தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். தத்துப்பூச்சி மற்றும் குருத்து ஈக்களை இரையாக உண்ணும்.

குள்ள சிலந்தி:
இந்த சிலந்திகள் சிறியதாகவும், பளபளப்புடன் காணப் படும். வயிற்றின் மேற்பரப்பில் கருப்பு வட்டங்கள் இரண்டு வரிசையில் அமைந்திருக்கும். மேலும் வயிற்றுப் பகுதி தடித்த முள் போன்ற தட்டால் மூடப்பட்டிருக்கும். வலைக்கட்டும். அதில் சிக்காத பூச்சிகளைத் தேடிச் சென்று பிடிக்கும் ஆற்றல் கொண்டது. தத்துப்பூச்சி, குருத்து ஈ உள்ளிட்ட அனைத்து பூச்சிகளையும் தின்னும் ஆற்றல் பெற்றது.

வட்டச் சிலந்தி:
உடற்பகுதி பளபளப்பாகவும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும் பிற அழகிய வண்ணங்களிலும் இந்த வகை சிலந்திகள் காணப்படும். பயிரின் மேற்பரப்பில் பெரிய வலையினை பின்னும். இவை வலைகளில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும். வலையில் வந்து மாட்டிக் கொள்ளும் குருத்துப் பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, இலை சுருட்டு புழு, வெட்டுக்கிளி மற்றும் பூச்சிகளை உண்ணும். வரைமுறை இன்றி பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிலந்திகள் அதிக அளவில் அழிந்து வருகிறது. பூச்சிகளின் பொருளாதார சேத நிலை அறிந்து மருந்து தெளிப்பதால் சிலந்திகள் அதிகம் அழியவில்லை என ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. சிலந்திகள் இன விருத்தி அடைந்து அதிக எண்ணிக்கையில் காணப்படும் காலங்களில் மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
தாவர பூச்சி மருந்துகளை குறிப்பாக வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டை கரைசல் போன்றவற்றை பயன்படுத்தும் போது சிலந்திகள் அழிவது கிடையாது. எனவே சிலந்திகளை பாதுகாப்போம்.

இயற்கை முறையில் தீமை செய்யும் பூச்சிகளை சிலந்திகளை கொண்டு கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்போம். செலவினை குறைத்து நிறைவான மகசூலையும், அதிகமான லாபத்தையும் அள்ளுவோம் என விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

 ரசாயன மருந்து இல்லாமல் பயிர்களை காக்கலாம்
 விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை
ஞாயிறு தோறும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் விவசாயிகள் போராட வேண்டியுள்ளது.
படியுங்கள் பூச்சி தாக்குதலை ரசயானம் இல்லாமல் இயற்கையாகவே கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அந்த வகையில் நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் சிலந்தி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi