நெல்லை, செப்.5: இந்து சமய அறநிலையத்துறையின் இலவச திருமண திட்டத்தின் கீழ் பாளை மேலவாசல் பிரசன்ன விநாயகர் முருகன் கோயிலில் ஏழை ஜோடிக்கு நேற்று இலவச திருமணம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருக்கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக திருமணம் செய்துவைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறையால் அமல்படுத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு கோயில்களில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளை மேலவாசல் பிரசன்ன விநாயகர் ஆலயம், முருகன் கோயிலில் ஏழை ஜோடிக்கு இந்து சமய அறநிலையத்துறை இலவச திருமணம் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த நெல்லை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் விவசாயி வெயிலப்பன், திருமணத்தை நடத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து மாலை மாற்றிக்கொண்ட மணமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திருமாங்கல்யம் 4 கிராம், பீரோ, கட்டில், மெத்தை, கைக்கடிகாரம், மிக்ஸி மற்றும் பண்ட பாத்திரங்கள், பூஜை பொருட்கள் என ₹50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ராம்குமார், திமுக வர்த்தக அணி நெல்லை மாநகர துணை அமைப்பாளர் எல்ஐசி பேச்சிமுத்து, வட்ட செயலாளர் பேபி கோபால், கால்வாய் சுடலைமணி, பேபி குமார், சீனிவாசன், அர்ச்சகர் குப்புசாமி பட்டர் மற்றும் மணமக்களின் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.