சென்ற வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் டிரெண்டில் இருந்தவர்கள் நம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிதான். 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கியது. 26 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ’ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.இதேபோல் ‘பி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 7 வருடங்களில் ஒருமுறை கூட டி20யில் நமக்கு வெற்றிக் கிடைக்கவில்லை. எனவே இந்த வருடம் அந்தக் கனவு நினைவாகுமா? என்னும் எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த சோகம் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளிலும் தொடர்கின்றன.இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இதன்மூலம் 2 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த ஏழு உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இங்கிலாந்து ஒருமுறையும், மேற்கிந்தியத் தீவுகள் ஒருமுறையும் கோப்பையை வென்றிருக்கின்றன. ஆனால், இந்திய அணிக்கு அந்தக் கனவு இதுவரை கைகூடவில்லை. ஆனால், இந்தமுறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருக்கிறது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.காரணம், பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இந்திய அணியினர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் என்பதுதான். இப்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளங்கும் தீப்தி சர்மா, இடதுகை சுழலில் மாயாஜாலம் காட்டும் ராதா யாதவ், வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் ரேணுகா சிங் இவர்களுடன் பேட்டிங்கில் அசத்தும் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுரும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முதல்நிலை வீராங்கனை ஜெமிமா ஆகியோரின் அதிரடி ஆட்டமும் இந்திய அணியின் கோப்பைக் கனவை நனவாக்கும் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். இதுதவிர, கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் இந்திய அணி வெற்றி கொண்டது. இதனால், தென்னாப்பிரிக்காவின் சூழலும், மைதானமும் பழக்கமாகி இருப்பதால் இந்திய அணிக்கு அது கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையும் சேர்ந்திருக்கிறது….