Sunday, June 4, 2023
Home » இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நபருக்கு விதித்த தண்டனை குறைப்பு: மேல்முறையீட்டில் ஐகோர்ட் உத்தரவு

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நபருக்கு விதித்த தண்டனை குறைப்பு: மேல்முறையீட்டில் ஐகோர்ட் உத்தரவு

by kannappan

சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நபருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை, 10 மாதங்களாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது மொனின்வார் ஹொசைன் உள்ளிட்ட சிலர் மீது, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும், தங்கி இருந்ததாகவும் திருப்பூர் காவல்துறையினர் 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், முகமது மொனின்வார் ஹொசைனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்தது. மற்றவர்களுக்கு 10 மாதம் சிறை தண்டனை, ரூ1000 அபராதம் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மொனின்வார் ஹொசைன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவரை அகதிகள் அல்லது வியாபார நோக்கோடு ஆள்கடத்தலில் பாதிக்கப்பட்டவராக மட்டுமே கருத வேண்டும். மேலும், இந்தியாவில் மனுதாரர் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்தற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டதை போன்று குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல், இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் அவரை வியாபார நோக்கோடு ஆள்கடத்தலுக்கு உட்படுத்தப்பட்டவராகத்தான் கருத வேண்டும் எனக் கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதமாக குறைத்து உத்தரவிட்டார்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi