திருமயம், மே 5: திருமயம், அரிமளம் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடி மின்னல், காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகளில் நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவைவிட மிக குறைந்த அளவே பெய்தது. அதேசமயம், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அப்பகுதியில் வறண்ட வானிலையுடன், பகல் நேரங்களில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதோடு இரவு நேரங்களில் அதிக அளவு உஷ்ணத்தை வெளிட்டு வந்தது. இதனால் அரிமளம், திருமயம் பகுதிகளில் உள்ள ஒரு சில நீர் நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடு என குறைந்து வருவதுடன், பெரும்பாலான நீர் நிலைகள் நீரின்றி வறண்டுள்ளன. இதனிடையே நேற்று இரவு அரிமளம், திருமயம் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு திடீர் பெய்த மழை வளிமண்டல உஷ்ணத்தை சற்று தனித்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால், மக்கள் நிம்மதியடைந்தனர்.