Thursday, July 10, 2025
Home மகளிர்கலைகள் ஆழ்கடலின் அழகுராணி!

ஆழ்கடலின் அழகுராணி!

by kannappan
Published: Updated:
நன்றி குங்குமம் தோழி
கைவீசம்மா கைவீசு கடலுக்கு போகலாம் கைவீசு… என்ன தோழிகளே ரைம்சை மாத்திட் டாங்களான்னு  நினைக்கிறீர்களா! ஆனால் உண்மையில் கேரளாவை சேர்ந்த ரேகா என்ற பெண், தனது குழந்தைகளுக்கு இப்படித்தான் பாடலை சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார். இரவில் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஓலமே நம்மை நிலைகுலைய செய்யும் நிலையில் 45 வயதான ரேகா சர்வசாதாரணமாக ஆழ்கடலுக்குள் படகில் சென்று மீன் பிடிக்கிறார். திருச்சூர் மாவட்டம் சவக்காடு சேட்டுவா பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவரின் கணவர் கார்த்திகேயனும், மீன்பிடி தொழிலாளி. இந்தி படிக்க சென்ற போது கார்த்திகேயனிடம் மனதை பறிகொடுத்து காதல் வயப்பட்டுள்ளார் ரேகா.

ஆனால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். மீன்பிடிப்பது தான் கார்த்திகேயனின் தொழில். அதில் வரும் வருமானத்தை கொண்டு தான் தன் நான்கு குழந்தைகளுடன் குடும்பத்தை நகர்த்தி வந்த ரேகா ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றது தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வு. ஒரு நாள் தன் கணவருடன் மீன்பிடிக்க செல்பவர் திடீரென வேலையில் இருந்து விலகிவிட்டதால் கணவருக்கு துணையாக வலையை தனது தோளில் போட்டுக் கொண்டு கடலுக்குள் தனது முதல் பயணத்தை தொடங்கினார் ரேகா. இன்று இந்தியாவில் முதல் மீன்பிடி லைசென்ஸ் பெற்ற பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். இதற்கான உரிமத்தை இவருக்கு கேரள மீன்பிடித்துறை வழங்கியுள்ளது. அரபிக்கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள் அவருக்கு தாலாட்டாய் அமைய இப்போது கடலம்மாவே தனக்கு துணை என்கிறார் ரேகா மீன்கள் குவிந்துள்ள வலைகளை இழுத்தபடி.  ஆண்களே ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதற்கு அஞ்சும் நிலையில் தனது கணவர் கார்த்திகேயனுடன் சர்வசாதாரணமாக செல்லும் ரேகாவின் முதல் கடல் பயணம் அவ்வளவு இனிமையானதாக இல்லை. கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் முதன்முதலில் கடலுக்கு சென்ற ரேகாவுக்கு மீனும், கடலும் செட்டாகாமல் உடல் நலம் குன்றியது. ஆனாலும் விடாப்பிடியாக கடலை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார். ‘‘என் கணவர்தான் மீன்பிடித் தொழிலில் உள்ள நுணுக்கங்களை எனக்கு கற்றுத் தந்தார். எங்க படகில் காம்பஸ், ஜி.பி.எஸ் பாதுகாப்பு ஜாக்கெட் என எந்த நவீன வசதியும் கிடையாது. கடலுக்கு போகும்போது, நீரோட்டத்தில் ஏற்பட்ட படகு அசைவினால் எனக்கு வாந்தி, மயக்கமெல்லாம் வந்தது. எழ முடியாமல் படகில் படுத்திடுவேன். வீட்டில் இருக்கும் 4 பெண் பிள்ளைகளை நினைத்து பார்ப்பேன். அடுத்த நிமிடம் வலை வீச தயாராகிடுவேன். மீன் பிடிக்க சென்று 10 வருசம் ஆச்சு. இந்த நிலையில் கேரளா மீன்வளத்துறை எனக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமத்தை வழங்கியது. மீன் வலை போடுறதுல இருந்து, இஞ்சினை இயக்கி படகை செலுத்துற வரைக்கும் எல்லாம் எனக்கு அத்துபடி’’ என்கிறார் கூடையில் இருந்து மீன்களை அள்ளியபடி ரேகா.பா.கோமதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi